தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக அஜித் குமார் – ஷாலினி திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த போது நட்பு உருவாகி, பின்னர் அது காதலாக மலர்ந்தது. அதன் தொடர்ச்சியாக 2000ஆம் ஆண்டு அஜித் மற்றும் ஷாலினி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த தம்பதியினருக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். கோலிவுட்டில் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் முன்னிலையில் இருப்பவர்கள் அஜித் – ஷாலினி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று (24ஆம் தேதி) அஜித் – ஷாலினி தம்பதியினர் தங்களின் 26வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இதையொட்டி திரைத்துறையைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில், வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன், ஏ.எல். விஜய் ஆகிய இயக்குநர்கள் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பகிர்ந்தனர். இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது சமூக வலைதளமான Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
