2017ஆம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்ன குமார். அதன் பின்னர் ‘ஆடை’, ‘குலுகுலு’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனங்களையும் எழுதியுள்ளார்.
தற்போது, ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜி-ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘29’ திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகனாக ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த விது நடித்துள்ளார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளதுடன், மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அவினாஷ் பிரேம்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 8ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில், ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இயக்குநர் ரத்ன குமார், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யை மையமாகக் கொண்டு ஒரு கிராமத்து கதையை உருவாக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “விஜய் சாரை வேட்டி சட்டையில் பார்த்து மிகவும் நாட்கள் ஆகிவிட்டது. அவருக்கு ஏற்ற ஒரு கிராமத்து கதையை தயார் செய்து வருகிறேன் என்று தெரிவித்தேன். அந்தக் கதையை பார்த்துவிட்டு விஜய் சார் எனக்கு மெசேஜ் அனுப்பி, அந்த கிராமத்து கதையை கேட்க விரும்புகிறேன் என்று கூறினார். அதன் பிறகு நான் நேரில் சென்று கதையை கூறினேன்; அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அதே சமயத்தில் ‘வாரிசு’ திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்துகொண்டிருந்தன. பின்னர் அந்தப் படம் துவங்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதால், விஜய் சார் அதில் கவனம் செலுத்தினார். அதனால் என் பயணமும் வேறு திசையில் சென்றது,” என்று அவர் தெரிவித்தார்.
