தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கர’ திரைப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 30-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தைச் சார்ந்த பல பேட்டிகளை இயக்குநர் அளித்து வருகிறார்.
அவ்வாறான ஒரு பேட்டியில் விக்னேஷ் ராஜா, தனுஷ் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், தனுஷ் சார் குறித்து எனது ஆரம்பகால நினைவு ‘திருவிளையாடல் ஆரம்பம்’ திரைப்படத்துடன் தொடர்புடையது. அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அந்த படம் தேர்வு காலத்தில் வெளியானதால், வீட்டில் இருந்து திரையரங்கிற்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. எனவே திருட்டு வீசிடி வாங்கி லேப்டாப்பில் பார்த்தேன். அந்தப் படத்தை பார்த்தபோது நான் சிரித்தேன். அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஒவ்வொரு முறையும் திருத்திய கதைச்சரட்டை தனுஷ் சாரிடம் கொடுக்கச் செல்லும் போது எங்களுக்குள் சுவாரஸ்யமான உரையாடல்கள் நடைபெறும். ஒரு முறை அவரிடம் ‘நீங்கள் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளீர்கள்; அதில் உங்களுக்கு மிகவும் சவாலானது எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘மாரி’ திரைப்படக் கதாபாத்திரமே மிகவும் சவாலானது என்று கூறினார். குழந்தைகளின் பலூனை சிகரெட் வைத்து வெடிக்கச் செய்யும் அளவுக்கு ஒரு எதிர்மறை தன்மை கொண்ட ரௌடியாக இருந்தாலும், அதே சமயம் அந்தக் கதாபாத்திரம் ரசிகர்களால் நேசிக்கப்பட வேண்டியது அவசியம். அது மிகவும் நுட்பமான சமநிலையை தேவைப்படுத்தும் ஒன்று, அதற்காக அதிக உழைப்பு எடுத்தேன்’ என்று தெரிவித்தார் என கூறினார்.
