கவுண்டமணி – செந்தில் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பல தலைமுறைகளாக ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றன. தமிழ் திரையுலக வரலாற்றில் இந்த கூட்டணி தனித்துவமான இடத்தை பிடித்ததுடன், அவர்கள் நடித்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றன.
திரைக்கு வெளியே செந்திலின் குடும்ப வாழ்க்கையும் எளிமையானதாகவே இருந்து வந்தது. 1984-ஆம் ஆண்டு கலைச்செல்வியை திருமணம் செய்துகொண்ட அவருக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மணிகண்ட பிரபு தற்போது மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
தந்தையின் திரைப்பயணம் குறித்து மனம் திறந்த மணிகண்ட பிரபு, சிறுவயதில் தங்களுக்கு புரியாத ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். ஏன் எப்போதும் அடிவாங்கும் கதாபாத்திரங்களில்தான் நடிக்கிறீர்கள்? ஒருமுறையாவது எதிர்த்து நிற்கும் வேடத்தில் நடிக்கலாமே என்று நாங்கள் அப்பாவிடம் கேட்போம் என்றார். அதற்கு அவர், இயக்குநர்கள் நினைப்பதை மாற்றச் சொல்ல முடியாது பா…என்று பதில் கூறுவார் என்றும் அவர் நினைவுகூர்ந்தார். இன்று அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரிகிறது என்றும், குடும்பத்தின் நலனுக்காகவே தந்தை எந்த தயக்கமும் இல்லாமல் அத்தகைய கஷ்டமான கதாபாத்திரங்களையும் ஏற்றுக்கொண்டார் என்பதை உணர்கிறோம் என்றும் மணிகண்ட பிரபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
