தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, நாள் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த முறை தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி நிலவியது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக கட்சி ஆகியவை தேர்தலில் போட்டியிடுகின்றன. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, இம்முறை அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.இன்றைய வாக்குப்பதிவில், காலை முதலே நடிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சியினர் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குரிமையை பயன்படுத்தினர். அந்த வகையில், தியாகராயநகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிம்பு தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
வாக்களித்ததற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிம்பு கூறியதாவது: “காலை நேரத்திலேயே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று ட்வீட் செய்ய நினைத்தேன். ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல் மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. அனைத்து தரப்பினரிடமும் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. அதை நான் ஒரு நல்ல மாற்றமாகக் கருதுகிறேன். மாற்றம் தேவையா வேண்டாமா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அது மக்களின் கையில் உள்ளது. மக்கள் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது. நான் ஒரு நடிகன் என்பதால், அனைத்து கட்சிகளிலும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். அதனால் எந்த ஒரு தரப்புக்கும் சாதகமாக கருத்து தெரிவிக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்களது விருப்பப்படி வாக்களிக்கப் போகிறார்கள்.
இந்த முறை மக்கள் மத்தியில் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்ற உற்சாகம் அதிகமாக உள்ளது. அதனால், முடிவுகளை காத்திருந்து பார்க்கலாம். எந்தக் கட்சிக்கும் ஆதரவாக பேச முடியாது. நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்ற கேள்விக்கு, ‘நான் இப்போது நன்றாக இருக்கிறேன், அது உங்களுக்கு பிடிக்கவில்லையா? இப்போதுதான் என் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைத்து நன்றாக நடிக்கத் தொடங்கியிருக்கிறேன். அதை கெடுக்க முயற்சிக்கிறீர்கள் போல இருக்கிறது’ என்று சிரித்தபடி பதிலளித்தார்.
