நடிகர் விஷால் இயக்கி கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘மகுடம்’. இப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது அது முடிந்துள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,இரண்டு வாரங்கள் கடுமையாக நடைபெற்ற காக்கிநாடா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மகுடம் குழு மீண்டும் சென்னை திரும்பியுள்ளது. என் அன்பான குழுவினருக்கு மனமார்ந்த நன்றி. குறிப்பாக என் ஒளிப்பதிவாளர் அபிநந்தன், பிரிந்தா மாஸ்டர், என் இயக்கக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. முழு அட்டவணையிலும் எனக்காக பொறுப்புடன் செயல்பட்ட பிரபாவுக்கு பாராட்டுகள்.என் முழுக் கலைஞர் குழுவிற்கும், குறிப்பாக எப்போதும் எளிமையுடனும் தொழில்முறையுடனும் இருந்த அஞ்சலிக்கு நன்றி. என் நெருங்கிய நண்பர் ஜான் விஜய், ஜே.பி. சார் மற்றும் கடும் வெப்பத்திலும் அமைதியாக உழைத்த அனைத்து பெண்களுக்கும் என் நன்றிகள் என்றுள்ளார்.
மேலும் இந்த பயணத்தில் நான் உடல்நலக்குறைவுடன் இருந்தபோதும் என்னை தாங்கி நிற்க உதவிய என் துணை சாய்தன்சிகாக்கு நன்றி. சுப்பிரமணியம் அண்ணாவுக்கும் நன்றி.படத்தின் மிகவும் கடினமான 90களின் பகுதியை நாங்கள் வெற்றிகரமாக முடித்துள்ளோம். நாளை முதல் சென்னை படப்பிடிப்புடன் இறுதி கட்டத்திற்கு செல்கிறோம். விரைவில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையின் மாயம் முதல் பாடலாக வெளியாகும். கடவுள் அருள் உண்டாகட்டும் என கூறியுள்ளார்.
