சாய் பல்லவி, தென்னிந்திய திரையுலகில் ‘நேச்சுரல் பியூட்டி’ என அழைக்கப்படும் முன்னணி நடிகையாக விளங்குகிறார். தற்போது, பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் உடன் இணைந்து ராமாயணம் திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அவரது புகழ் உச்சத்தில் இருந்தபோதிலும், அவர் மலையாளி அல்ல என்ற பழைய சர்ச்சை அவ்வப்போது சமூக வலைதளங்களில் மீண்டும் எழுந்து வருகிறது. இந்த நிலையில், அந்த விவகாரம் குறித்து சாய் பல்லவி உணர்ச்சிபூர்வமான விளக்கம் அளித்துள்ளார்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், “நீங்கள் மலையாளி ஆக இருப்பதனால் எப்படி இவ்வளவு அழகாக தெலுங்கு பேசுகிறீர்கள்?” என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, “நான் மலையாளி அல்ல, நான் ஒரு தமிழ்ப்பெண்” என்று குறிப்பிட்டார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இந்த வீடியோவை சிலர் தவறாக மாற்றி, “தன்னை மலையாளி என்று அழைத்ததற்காக சாய் பல்லவி கோபமடைந்தார்” எனப் பொய்யான தகவல்களை பரப்பினர். இதனால் மலையாள ரசிகர்கள் மத்தியில் தேவையற்ற சர்ச்சை உருவானது.
சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த சம்பவம் குறித்து சாய் பல்லவி பேசுகையில், “நான் சொல்லாத விஷயங்களைச் சொன்னதாக கூறியதும், அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. அந்த செய்திகளைப் பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன், மேலும் மனஉளைச்சலால் அழுதும் விட்டேன். நான் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவள். எனது தாய்மொழியும், என் அடையாளமும் தமிழ் என்பதை மட்டும் தான் நான் அப்போது கூறினேன். மற்ற எந்த மொழியையோ, மக்களையோ நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
—
