மாளவிகா மோகனன், தற்போது கார்த்தி உடன் சர்தார் 2 மற்றும் விஜய் சேதுபதி உடன் பாக்கெட் நாவல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். பான் இந்தியா அளவில் முன்னணி நடிகையாக விளங்கும் அவர், ரஜினிகாந்த் நடித்த பேட்ட மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் ரசிகர்களுடன் நடந்த உரையாடலில், சென்னையில் அனுபவித்த தனிமையைப் பற்றி மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார். “வேலை காரணமாக நான் கடந்த மாதம் சென்னையில் தங்கியிருந்தேன். நீண்ட நாட்கள் குடும்பத்தையும், அன்புக்குரியவர்களையும் விட்டு தனியாக இருப்பது ஒருவிதமான தனிமையை ஏற்படுத்துகிறது. நாள் முழுவதும் உழைத்துவிட்டு, இறுதியில் யாருடனும் பேசாமல் ஒரு ஹோட்டல் அறைக்கு திரும்புவது மனதிற்கு சிரமமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இது வெளிப்படையாக காட்டப்படும் உணர்ச்சி அல்ல. அமைதியான, உள்ளார்ந்த மனஅழுத்தம் போல இருக்கும். வெளியில் அழுதேன் என்று இல்லை, ஆனால் அந்த நேரத்தில் ஒரு மனச்சோர்வு ஏற்பட்டது” என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
—
