‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், ‘நானும் ரவுடிதான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தை பெற்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகும்.
இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சீமான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத் குறித்து உணர்ச்சியுடன் பேசினார். “நானும் ரவுடிதான்’ படப்பிடிப்புக்காக வெறும் 250 ரூபாயுடன் பாண்டிச்சேரிக்கு சென்றேன். அப்போது அனிருத்திடம் மட்டும் தெரிவித்து சென்றேன். நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ‘உங்கள் பையில் 50,000 ரூபாய் வைத்துள்ளேன்’ என்று அவர் செய்தி அனுப்பினார். அந்த தருணம் எனக்கு மிகுந்த உணர்ச்சி தருணமாக இருந்தது. அந்த நினைவினை நான் ஒருபோதும் மறக்க முடியாது. அனிருத் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரமாக இருக்கிறார்” என்று கூறினார்.
