மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, சரத்குமார், கவுதம் ராம் கார்த்திக் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இதுகுறித்து கவுதம் ராம் கார்த்திக் அளித்த பேட்டியில், தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’, ‘ரூட் லெகசி’, ‘பிளடி பாலிடிக்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறினார். இதில் ‘மிஸ்டர் எக்ஸ்’ ஒரு முழுமையான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது தன்னுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் வெளிப்படையாக பார்க்கும்போது எதிர்மறையானதாக தோன்றினாலும், அதே நேரத்தில் நேர்மறையான அம்சங்களையும் கொண்டிருக்கும்; அதை எப்படி பார்க்கிறார்கள் என்பது ரசிகர்களின் பார்வையைப் பொறுத்தது என்றும் கூறினார்.
இந்தப் படத்தில் ஆர்யா, சரத்குமார் உள்ளிட்ட பலருடன் நடித்திருந்தாலும், மஞ்சு வாரியருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காதது குறித்த வருத்தமும் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். இதுவரை நடித்த எந்தப் படத்திற்கும் இவ்வளவு உடல் உழைப்பு எடுத்ததில்லை என்றும், இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மிகவும் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். சென்னை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும், தனது பெயரை தாத்தா முத்துராமனின் ‘ராம்’ மற்றும் தந்தை கார்த்திக் பெயரை இணைத்து ‘கவுதம் ராம் கார்த்திக்’ என மாற்றியதாக கூறினார்.
ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் தன்னிடம் இருப்பதாகவும், அது விரைவில் நிறைவேறும் என்றும் தெரிவித்தார். தாத்தா முத்துராமனை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் திரையில் கொண்டு வந்து அவருடன் இணைந்து நடிக்க விருப்பமில்லை என்றும், அது தவறாக அமையக்கூடும் என்ற அச்சம் உள்ளதாகவும் கூறினார்.
தந்தை நடித்த ‘கோபுரத்தில் சீதை’, ‘உள்ளத்தை அளித்த தா’, ‘சோலைக்குயில்’ போன்ற திரைப்படங்கள் தன்னுக்கு மிகவும் பிடித்தவை என்றும், தனது மனைவி மஞ்சிமா மோகன் எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார். கதை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் அவரிடம் ஆலோசனை பெற்று முடிவெடுக்கிறேன் என்றும் கூறினார். வாழ்க்கையில் சில நேரங்களில் மனச்சோர்வு ஏற்பட்டால் சில நிமிடங்கள் அழுவேன்; அதன் பிறகு மீண்டும் உற்சாகமாக மாறிவிடுவேன் என்றும், நீண்ட தூர பயணங்களில் குறிப்பாக காரில் புதுச்சேரி வரை செல்வது மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
