நடிகர் சிம்பு நடித்த ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் தயாரிப்பில் அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் அவரை மேலும் பிரபலமான இயக்குநராக உருவாக்கியது. இதற்கிடையில், தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பின்னர், நடிகர் சூர்யா நடிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தை இயக்கி தனது பயணத்தை கவனம் ஈர்த்தார்.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் நடித்த படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தாலும், சில மாதங்களில் அது கைவிட்டு போனது. அதன் பின்னர், நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்ஐகே) திரைப்படத்தை இயக்கினார். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்த இந்தப் படம், வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், ‘எல்ஐகே’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் விக்னேஷ் சிவனிடம், நடிகர் தனுஷுடனான நட்பு மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட பிரிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நடிகர் தனுஷை நான் மிகவும் விரும்புகிறேன். அவர் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி, என் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் மனிதர். ஜூலை 28ஆம் தேதி அவருடைய பிறந்த நாள். அதே தேதியில்தான் என் தந்தையும் மறைந்தார். எனவே, அவரிடம் என் தந்தையைப் போன்ற உணர்வை நான் காண்கிறேன். அந்த அளவுக்கு அவரை நான் மதிக்கிறேன்.
ஆனால் சில சமயங்களில் சிலருடன் ஏன் முரண்பாடுகள் உருவாகின்றன என்பது நமக்கே புரியாது. அதைப் பற்றி நான் இன்றுவரை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. சூழ்நிலைகளே அப்படி அமைந்துவிட்டன. தனுஷுடன் ஏற்பட்ட நட்பு முறிவை என் வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்பாகவே நான் கருதுகிறேன். அதே சமயம், நெருக்கமான ஒருவரை இழப்பது ஒரு வகையில் அவமானமாகவும் உணரப்படுகிறது. ஏதோ ஒரு இடத்தில் நான் தவறு செய்திருக்கலாம். இன்று நான் இருக்கும் நிலைக்கு காரணம் தனுஷ்தான். ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் இருந்தேன். அவர் உணவு உட்கொண்ட பிறகே நான் உணவு எடுத்துக்கொள்வேன் என்ற அளவுக்கு நெருக்கம் இருந்தது. இரண்டு பேருக்குள் பிரச்னை இருந்தால் பேசிக் கொண்டு சரி செய்யலாம். ஆனால், பேசாமல் விலகி விட்டால் அதை எப்படி சரிசெய்வது?” என்று தெரிவித்துள்ளார்.
