ஹிப்ஹாப் தமிழா என்ற பெயரில் இசைக்குழுவை தொடங்கி, பல பாடல்களைப் பாடி இசையமைத்து வெளியிட்டு தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் ஆதி. காலப்போக்கில் ஹிப்ஹாப் என்ற பெயரே அவரது அடையாளமாக மாறியது. ஆங்கில ராப் இசையைப் போலவே தமிழிலும் ராப் பாடல்களை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்பதை அவர் தனது படைப்புகள் மூலம் நிரூபித்தார். குறிப்பாக ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட டக்கர் டக்கர் பாடல், ஏராளமான மக்களிடம் சென்று பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆதி, தனது கல்லூரி கால நினைவுகள் முதல் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “கல்லூரி நாட்களில் இருந்தபோதே நான் என்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருக்கத் தொடங்கினேன். எப்போதும் முகமூடியும் பீனி தொப்பியும் அணிந்து கொண்டே இருப்பேன். நான் வெளியிட்ட ஆரம்பகால இசை வீடியோக்களில் கூட என் கழுத்தைச் சுற்றி எப்போதும் ஒரு ஸ்கார்ப் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். இந்த விஷயம் என் பெற்றோருக்குக் கூட தெரியாது” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “எவரும் என்னுடன் எளிதாக ஒன்றிப்போய் விடக்கூடாது என்பதற்காகவே நான் அப்படி இருந்தேன். ஆனால் காலப்போக்கில் எனது உணர்வுகளை எனது தாய்மொழியான தமிழில் வெளிப்படுத்துவதுதான் மிகவும் இயல்பானதும் சிறந்ததுமாக இருப்பதை உணர்ந்தேன். நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் உள்ளூர் அடையாளத்துடனும் கலாசாரத்துடனும் இணைந்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உலகளாவிய அளவில் அங்கீகாரத்தைப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் எந்தத் துறையில் செயல்பட்டாலும், நீங்கள் செய்வதைக் குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு குறித்து சமூகத்தில் பல தவறான புரிதல்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். “இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, பாரம்பரியம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றோடு ஆழமாகப் பின்னிப்பிணைந்த ஒரு வாழ்வியல் முறையாகும் என்பதை விளக்கிய பலரை நாங்கள் சந்தித்தோம். அந்த உண்மையான பார்வையை எங்கள் பாடலின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க முயன்றோம். ஹிப்ஹாப் தமிழா என்பது வெறும் வணிக அடையாளம் அல்ல. ஹிப்ஹாப் தமிழா என்பது ஒரு இயக்கம்” என்று ஆதி தனது உரையில் தெரிவித்தார்.
—
