நடிகை ஜான்வி கபூர் தனது டீன் வயதில் எதிர்கொண்ட அதிர்ச்சியான அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், 15 வயதில் இருந்தபோது, தனது முகத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப்பேக் புகைப்படம் ஒரு ஆபாச இணையதளத்தில் இடம்பெற்றிருந்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பள்ளியில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப வகுப்பின் போது நடந்ததாகவும் அவர் கூறினார்.
அந்த நேரத்தில் சில மாணவர்கள் அத்தகைய இணையதளங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, தன்னுடைய புகைப்படங்களும் அங்கு இருப்பதை அவர் கவனித்துள்ளார். அது உண்மையான புகைப்படமா அல்லது டீப்பேக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை அப்போது புரிந்துகொள்ள முடியாமல் குழப்பமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சில சமயங்களில் அதிகாரப்பூர்வ செய்தி தளங்களில்கூட, தாம் அணியாத உடைகளில் அல்லது தாம் எடுக்காத போஸ்களில் உருவாக்கப்பட்ட போலியான படங்கள் பரவி வருவதாகவும், இது தனது மனநிலையை பாதிக்கும் அளவுக்கு தொந்தரவு அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஜான்வி கபூர் கடைசியாக ‘சன்னி சங்கரி கி துல்சி குமாரி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஷஷாங்க் கைதான் இயக்கிய அந்தப் படத்தில் வருண் தவான், சன்யா மல்கோத்ரா, ரோகித் ஷராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
