தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சுருதி ஹாசன், தனது நடிப்புத் திறமையால் மட்டுமின்றி இசைத் துறையிலும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். பின்னணி பாடகியாக பல வெற்றிப் பாடல்களை வழங்கியுள்ள அவர், தனிப்பட்ட இசை ஆல்பங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார். சமீபத்தில் சாய் அபயங்கர் வெளியிட்ட ‘பவழ மல்லி’ இசைத் தொகுப்பிலும் தனது குரலால் முத்திரை பதித்துள்ளார்.
திரைப்படம் மற்றும் இசை ஆகிய இரு துறைகளிலும் பிஸியாக இருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்களுடன் பகிர்வதில் சுருதி ஹாசன் எப்போதும் வெளிப்படைத்தன்மையை கடைபிடித்து வருகிறார். குறிப்பாக காதல் தொடர்பான அனுபவங்களை அவர் முன்பே திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் தனது காதல் வாழ்க்கையைப் பற்றி மீண்டும் பேசுகையில், “என் வாழ்க்கையில் பல காதல்கள் வந்துள்ளன. அவை பெரும்பாலும் காயங்களாக முடிந்தன. தற்போது அந்த காயங்கள் ஆறிவிட்டதால், நான் அமைதியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இப்போது எனது விருப்பமும் தேடலும் தனிமையே. அந்த தனிமையில் நான் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
