ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இதைத் தொடர்ந்து, அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், தவெக கட்சியின் ஆதவ் அர்ஜுனா, “ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் தடுக்கப்பட்டது திமுகவால் தான்” என்று சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், அந்த கருத்து உண்மையல்ல என்றும், “காலம் பேசாது, ஆனால் சரியான நேரத்தில் பதில் தரும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், அதன் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க உள்ள புதிய படம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் எனவும் கூறினார்.அப்போது, சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டபோது, “வணக்கம்” என்று மட்டும் பதிலளித்தார். மேலும், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு “No comments” என்று சுருக்கமாக பதிலளித்தார்.
