2010ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் இணைந்து நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியான சமயத்தில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், சில ஆண்டுகள் கடந்த பிறகு, ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் பெரிதும் பாராட்டப்பட்டு கொண்டாடப்பட்டது. இதன் விளைவாக, படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரசிகர்களின் இந்த உற்சாகமான ஆதரவைத் தொடர்ந்து, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ உருவாகும் என இயக்குநர் செல்வராகவன் அறிவித்தார்.
2021ஆம் ஆண்டு இந்தத் தொடர்ச்சிப் படம் குறித்து அறிவிக்கப்பட்டு, 2024ஆம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை படப்பிடிப்பு தொடங்காததுடன், புதிய அப்டேட்களும் வெளியாகவில்லை. இந்த சூழலில், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் உருவானால் அதில் நடிப்பீர்களா என நடிகை ஆண்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, “ஆயிரத்தில் ஒருவன் 2-ல் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். அந்த படம் உருவாகுவதில் எனக்கு மகிழ்ச்சி தான், ஆனால் அதில் நான் இடம்பெற மாட்டேன். இதற்குக் காரணம், இயக்குநர் செல்வராகவனுடன் பணியாற்றுவது மிகவும் சவாலான ஒன்று. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்காக மட்டும் சுமார் 200 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பின்னர் நான் நடித்த பிற படங்களும் கதாபாத்திரங்களும் இந்த அனுபவத்தால் எனக்கு மிகவும் எளிதாக தோன்றின” என்று தெரிவித்துள்ளார்.
