கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நீடித்து வருகிறது. இதனால் அங்கு சாதாரண பயணங்களையே மேற்கொள்வது கூட சிரமமாகி உள்ள நிலையில், அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த ஷாருக்கான் நடித்துவரும் ‘கிங்’ திரைப்படத்தின் படக்குழுவினர் தங்களது திட்டத்தை மாற்றியுள்ளனர். தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அந்தப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தும் முயற்சியை அவர்கள் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று, அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குநர் அகமது கான் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ திரைப்படத்திலும், மிகப்பெரிய நட்சத்திரங்கள் இணையும் ஒரு பாடல் காட்சியை துபாயில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக நிலைமை சீராகும் என எதிர்பார்த்து காத்திருந்த படக்குழுவினர், தற்போது அந்த யோசனையை முழுமையாக கைவிட்டு, மும்பையில் உள்ள ஸ்டுடியோவில் துபாய் நகரை ஒத்த ஒரு பிரமாண்டமான செட்டை அமைத்து அந்த பாடல் காட்சியை படமாக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த பாடல் காட்சியில் அக்ஷய் குமார் மட்டுமன்றி சுனில் ஷெட்டி, ரவீணா டாண்டன், ஜாக்கி ஷெராப், லாரா தத்தா, திஷா பதானி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளதால், அனைவரையும் மீண்டும் துபாய் பயணத்திற்காக ஒரே நேரத்தில் ஒருங்கிணைப்பது சிரமமாக இருக்கும் என்பதாலும், மும்பையிலேயே படப்பிடிப்பை நடத்துவது சிறந்த தீர்வாக கருதப்பட்டுள்ளது.
