இயக்குநர் ஆதித்யா தரின் இயக்கத்தில், நடிகர் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் ஹிந்தியில் வெளியாகி 1300 கோடிக்கும் மேற்பட்ட வசூலை பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 19ஆம் தேதி அதன் இரண்டாம் பாகமான ‘துரந்தர் 2’ வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டாம் பாகம் இதுவரை 1,434 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
இந்த நிலையில் ‘துரந்தர்’ மற்றும் அதன் தொடர்ச்சியான ‘துரந்தர் ரிவெஞ்ச்’ ஆகிய இரண்டு பாகங்களின் முழுக் கதையையும் ஒரே தொடர்ச்சியான திரைப்படமாக வழங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த இரண்டு பாகங்களையும் இணைத்து மொத்தம் 7 மணி 30 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு படமாக ஆங்கில துணை உரைகளுடன் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நீளமான பதிப்பிற்கு மூன்று இடைவேளைகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் ஹாங்காங்கில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். வாரத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலான திரையிடல்களுடன் சில தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் மட்டுமே இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். பின்னர் இந்தியாவிலும் இப்படம் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
