தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு காலடி எடுத்து வைத்தவர் நடிகர் விஜய். அவரின் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய திரைப்பட தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுத்ததால், இப்படத்தின் வெளியீடு தாமதமடைந்தது. இதையடுத்து, படக்குழுவினர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், படம் மீண்டும் தணிக்கை குழுவிடம் சான்றிதழ் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போது படம் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதேவேளை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், படம் தேர்தல் ஆணையத்தின் ஆய்விற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தேர்தலுக்கு முன்பாக படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் சார்ந்த வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, பத்திரிகையாளர்களாக நடித்துள்ள லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோர் இடம்பெறும் காட்சிகளில் உள்ள சில வசனங்களை மறுஆய்வு குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வருகிற ஏப்ரல் 24 அல்லது ஏப்ரல் 30ஆம் தேதிகளில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
