தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய நட்சத்திர வெற்றியையும் அங்கீகாரத்தையும் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வெளியான புஷ்பா – 2 ரூ. 2 ஆயிரம் கோடி வரை வசூலித்து வணிக ரீதியாக சாதனை படைத்தது.
புஷ்பா – 2 திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் தன் 22-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான பாசில் ஜோசஃப் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தன் 25வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்னல் முரளி திரைப்படம் மூலம் இயக்குநராகவும், பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள முன்னணி நடிகர் பாசில் ஜோசஃப் அல்லு அர்ஜுனின் 25வது படத்தை இயக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
