சமீபத்தில் ஐதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் தனது சாதி குறித்து குறிப்பிட்ட பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “நான் ஒரு நாயுடு குடும்பத்தைச் சேர்ந்தவன்; சென்னையில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு மொழி அதிகமாக வராது” என்று அவர் கூறியிருந்தார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அதற்காக மன்னிப்பு கேட்டிருந்தார்.
அவர் தனது விளக்கத்தில், “சாதியை பெருமையாகக் கொண்டாடுபவர்கள் எனக்கு பிடிக்காது. ‘இவன்’ போன்ற படங்களிலும் பல்வேறு இடங்களிலும் நான் அதை எதிர்த்து பேசிவந்துள்ளேன். அப்படியிருக்க, நான் அதையே செய்வேன் என்பது சரியல்ல. எனது பேச்சு தவறாகிவிட்டதை உணர்ந்து மனவேதனையுடன் இருக்கிறேன். இத்தனை பேரை பாதித்திருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது. நான் எப்போதும் என் திறமையை மட்டுமே நம்புவேன்; சாதியை முன்வைத்து எந்த வகையிலும் முன்னேற வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. இனி இப்படியான தவறு மீண்டும் நடைபெறாது என்று உறுதியளிக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், பார்த்திபன் தன்னை “சாதி, மதம் இல்லாதவன்” என்று அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும் சான்றிதழைப் பெற முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட யூடியூப் வீடியோவில், “மனதளவில் நான் ஏற்கனவே சாதி, மதம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் வாழ்கிறவன். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட சம்பவம் காரணமாக ‘No caste, No religion’ என்ற அரசின் சான்றிதழைப் பெற முயற்சி செய்து வருகிறேன். விரைவில் அதற்கான அனுமதி மற்றும் ஆணை கிடைக்கும் என நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.
