மலையாளத் திரையுலகில் மம்முட்டி நடித்த ‘சிபிஐ டைரி குறிப்பு’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, கடந்த 35 ஆண்டுகளாக இந்த தொடர் மொத்தம் ஐந்து பாகங்களாக வெளியாகியுள்ளது. இந்த அனைத்து பாகங்களிலும் ‘சேதுராம ஐயர்’ என்ற சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐந்து பாகங்களுக்கும் புகழ்பெற்ற கதாசிரியர் எஸ்.என். சுவாமி தான் கதை எழுதியுள்ளார். குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டு ‘சிபிஐ: தி பிரெய்ன்’ என்ற பெயரில் ஐந்தாம் பாகம் வெளியானது. ஆனால், அது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில், இந்த ஐந்து பாகங்களையும் இயக்கிய இயக்குநர் கே. மது சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், “நீங்கள் அனைவரும் சிபிஐ படத்தின் ஐந்து பாகங்களையும் பார்த்திருக்கிறீர்களா? அவற்றை முழுமையாக ரசித்தீர்களா? ஆறாவது பாகத்தைக் காண விரும்புகிறீர்களா? அப்படியானால், அது நிச்சயமாக விரைவில் உருவாக உள்ளது. மிக விரைவில் அந்த படத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்,” என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மலையாள ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
