‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். தற்போது அவர், கஸ்தூரி ராஜா நடித்துள்ள ‘ஹபீபி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இஸ்லாமிய குடும்பத்தின் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் குறித்து கடந்த சில மாதங்களாகவே பல பிரபலங்கள் மேடைகளில் நல்ல கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த திரைப்படம் குறித்து பேசுகையில், அதில் நடித்துள்ள இயக்குநர் கஸ்தூரி ராஜா, “ ‘ஹபீபி’ படத்தில் எனது பங்கு, படக்குழுவினரை ஆதரித்து அவர்களை மேலும் வலுப்படுத்துவதற்காக இருந்தது. ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களை அடையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இந்த படைப்பில் அந்த உண்மைத்தன்மை தெளிவாக இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறுகையில், “ ‘ஹபீபி’ திரைப்படத்தில் கஸ்தூரி ராஜா அவர்கள் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரது அனுபவமும் கதையைப் பற்றிய ஆழ்ந்த புரிதலும் எங்கள் படைப்புப் பயணத்திற்கு தெளிவையும் நம்பிக்கையையும் அளித்தது. மத வேறுபாடுகளைத் தாண்டி சமூகத்தில் மூத்தவர்களுக்கு நாம் வழங்கும் மரியாதையை அவரது கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. ஒற்றுமை, கண்ணியம் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் நிறைந்த கதாபாத்திரமாக அவரது பங்கு அமையும். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருந்தாலும், அதை வெளிப்படுத்தாமல் அனைவருடனும் மிக எளிமையாக பழகினார் இப்படம் மனிதத்தை போற்றும் படமாக என்று கூறினார்.
