ஏ.எம். ரத்னம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறைகளில் ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனத்தின் மூலம் பல முக்கியமான திரைப்படங்களை தயாரித்துள்ளார். தமிழில் இந்தியன், கில்லி, தூள், பாய்ஸ், சிவகாசி, குஷி, ஆரம்பம், வேதாளம் போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது தயாரிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், தமன், நகுல், மணிகண்டன், விவேக் உள்ளிட்டோர் நடித்த பாய்ஸ் திரைப்படம் 2003ஆம் ஆண்டு வெளியானது. அப்போது, ஷங்கர் இப்படத்தை இயக்கியது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
இந்தப் படம் குறித்து ஏ.எம். ரத்னம் கூறுகையில், “பாய்ஸ் திரைப்படம் வெளியான போது தமிழகத்தில் பெரிய அளவில் ஓடவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நல்ல வெற்றியை பெற்றது. தமிழில் தியேட்டர்களில் அதிகமானோர் பார்க்கவில்லை. தற்போது நினைத்தாலும், நான் மற்றும் ஷங்கர் கூட ‘பாய்ஸ்’ போன்ற ஒரு படத்தை மீண்டும் உருவாக்க முடியாது. அதனால் விரைவில் அந்தப் படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
