பாத்வே புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்துள்ள கார்மேனி செல்வம் திரைப்படத்தை ராம் சக்ரி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், அபிநயா, லட்சுமி பிரியா சந்திரமௌலி, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி இசையமைத்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்தத் திரைப்படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய சமுத்திரக்கனி, “உண்மை மற்றும் எளிமை ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்திற்கு ஏதாவது பங்களிப்பு செய்ய வேண்டும், அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். இத்தகைய மனிதர்களால் தான் உலகம் இயங்குகிறது என நான் நம்புகிறேன்.
மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையுடன் வாழ்பவர்கள் தான் உண்மையான செல்வந்தர்கள். அவர்கள் தான் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறவர்கள். இதை எடுத்துரைப்பதற்காகவே ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பணக்காரர் மற்றும் செல்வந்தர் என்ற இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை இந்த படம் விளக்குகிறது. பணக்காரர் பிரச்சனைகளுடன் வாழ்பவர்; செல்வந்தர் மகிழ்ச்சியுடன் வாழ்பவர். இந்தப் படத்தின் மூலம் உங்களை செல்வந்தர்களாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.
‘கார்மேனி செல்வம்’ ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. நாங்கள் இல்லாமல் போனாலும் இந்த படைப்பு நிலைத்திருக்கிறது; அது எப்போதும் உங்களுடன் இருக்கும். வாழ்க்கையில் அதிக சுமைகளை ஏற்றிக்கொள்ள வேண்டாம். குறிப்பாக EMI போன்ற பொருளாதார சுமைகளில் சிக்கிக்கொள்ளாமல், அவற்றை மெதுவாக குறைத்து, சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முயற்சி செய்யுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
