முன்னணி இயக்குநரான செல்வராகவன், தற்போதைய காலகட்டத்தில் நடிகராகவும் வலம் வருகிறார். அண்மைக் காலமாக அவர் தத்துவச் சிந்தனைகளை பகிரும் விதமாக வீடியோக்களை வெளியிட்டு வருவதுடன், வாழ்க்கை தொடர்பான பல ஆலோசனைகளையும் சமூக வலைதளங்கள் மூலம் வழங்கி வருகிறார். இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: “இந்த உலகத்தில் ‘உங்களால் முடியாது’ என்ற வார்த்தைகளை பலரும் எங்களை நோக்கி எறிவார்கள். உண்மையில், யாருக்கும் மற்றொருவரைப் பற்றி கருத்து தெரிவிக்கும் தகுதி இல்லை. தங்களுக்கே பல குறைகள் இருக்கும் நிலையில், மற்றவர்களை விமர்சிப்பது எவ்வாறு சாத்தியம்? நாம் செய்வது பெரிய தவறு என்னவென்றால், அவர்கள் கூறிய வார்த்தைகளை நினைத்து கொண்டு முழு நாளையும் கவலைப்படுவதுதான். இவ்வாறு இருந்தால் நம் இலக்கை எவ்வாறு அடைய முடியும்? மனம் என்பது மிகவும் புனிதமான ஒன்று.
அதில் நல்ல எண்ணங்களை மட்டுமே வைத்திருந்தால் நாம் விரைவாக நம் இலக்குகளை அடைய முடியும். தேவையற்றவர்களின் பேச்சுகள் மீது கவனம் இருந்தால் நாம் முன்னேற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
