தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் தமன். பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிகராகவும் திரும்பி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது சினிமா பயணம் குறித்து பல சுவாரஸ்யமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அதில், ராஜமௌலி போன்ற பெரிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா என கேட்கப்பட்டபோது, “கீரவாணி உள்ளார், அவருக்குப் பிறகு அவரது மகன் கால பைரவா இருக்கிறார். நமக்கு தேவையானவை அனைத்தும் நம்மிடமே உள்ளது. த்ரிவிக்ரமுடன் இணைந்து நான் என் ‘பாகுபலி’யை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். பாபி மற்றும் கோபிசந்த் மலினேனி போன்றவர்களுடன் இணைந்து எனக்கு வேண்டியதை செய்து வருகிறேன். அவர்களால் முடியாதது எதுவும் இல்லை; எல்லாமே கற்றலின் ஒரு பகுதி தான்” என்று தெரிவித்தார்.
மேலும், “ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். அதேபோல் நாமும் ஒருநாள் அந்த சாதனையை அடைய முடியும். அவர் அந்த பாதையை எங்களுக்கு காட்டி வைத்துள்ளார். அந்த வழியில் பயணித்து நாமும் ஆஸ்கர் வெல்லலாம். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ போன்ற பட இயக்குநர் எனக்காக வர வேண்டிய அவசியமில்லை. ராஜமௌலியுடன் பணியாற்றிய கீரவாணி ஆஸ்கர் பெற்றது போல, ஒருநாள் த்ரிவிக்ரமுடன் இணைந்து நான் செய்யும் ‘GOD OF WAR’ திரைப்படத்தின் மூலம் அந்த சாதனை எட்டப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தமன் கூறியுள்ளார்.
