ஹிந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘கிங்’. 2023ஆம் ஆண்டில் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த ‘பதான்’ திரைப்படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த், இரண்டாவது முறையாக ‘கிங்’ திரைப்படத்திற்காக மீண்டும் ஷாருக்கானுடன் இணைந்துள்ளார். மிகப் பிரம்மாண்டமான செலவில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில், விரைவில் ஒரு முக்கியமான சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளது.
இந்த சண்டைக் காட்சியில் ரஷ்யாவைச் சேர்ந்த 10 திறமையான சண்டைக் கலைஞர்கள் ஷாருக்கானுடன் மோதவுள்ளனர். இதற்கான பயிற்சிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த காட்சிக்காக மும்பையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோல்டன் டொபாக்கோ ஸ்டுடியோவில் மிகப்பெரிய மில் செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நீளமான மற்றும் விறுவிறுப்பான சண்டைக் காட்சியாக இது உருவாகி, படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அமையும் என படக்குழுவினர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
