‘பாகுபலி 2’ திரைப்படத்திற்குப் பிறகு அதிகமான படங்களில் தொடர்ந்து நடிக்காமல், தன்னுடைய தேர்வில் நாயகியை மையமாகக் கொண்ட கதைகளில் மட்டும் நடித்து வருபவர் அனுஷ்கா. ‘பாகுபலி 2’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலிப்பதாக பல செய்திகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் பின்னர் அந்த தகவல்களை இருவரும் மறுத்தனர். அதன் பின்னரும் இன்றுவரை பிரபாஸைப் போலவே அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிப்பட்ட வாழ்க்கையை நடத்தி வருகிறார். இதனால் அவரைச் சுற்றி திருமணம் தொடர்பான வதந்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் தற்போது 44 வயதாகும் அனுஷ்கா விரைவில் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக டோலிவுட்டில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த செய்தி வெளியானவுடன் அதற்கு அனுஷ்கா உடனடியாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, தனது திருமணம் குறித்த வதந்திகளை வெளியிடும் ஒவ்வொரு முறையும் ஊடகங்கள் தனது வயது 44 என்பதை குறிப்பிட்டு பேசுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இதே வயதில் பல ஹீரோக்கள் திருமணம் செய்யாமல் இருந்தாலும், அவர்களின் வயதை யாரும் இவ்வாறு எடுத்துக் கூறுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக நடிகைகள் குறித்து பேசும்போது மட்டுமே வயதை பெரிதுபடுத்தி பேசப்படுவது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் நடிகர்களுக்கு வழங்கப்படும் மரியாதையை நடிகைகளுக்கும் ஊடகங்கள் வழங்க வேண்டும் என்று தனது அதிருப்தியையும் கோபத்தையும் அனுஷ்கா வெளிப்படுத்தியுள்ளார்.
