நடிகர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கவுரி ப்ரியா இணைந்து நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தின் விழாவில், இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, தயாரிப்பாளர் சங்கம் தொடர்பான தனது கருத்துகளை வெளிப்படுத்திய அவர், “தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்து போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் நம்மால் உருவாக்கப்படும் படங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு பயம் இருந்தது. அதனால் தான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டாலும் அதை முழுமையான பொறுப்புடன் செய்ய வேண்டும். ஆனால் அந்த பொறுப்புகளுடன் சேர்ந்து பல பிரச்சனைகளும் வரும். அதனால் தான் அந்த தேர்தலில் நான் கலந்து கொள்ளவில்லை. அதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், “இது யாருக்கும் அறிவுரை அல்ல, நான் சந்தித்த அனுபவம் தான். சினிமா என்பது மிக அற்புதமான ஒரு துறை. அதில் சேர வருபவர்கள் தயக்கம் கொள்ள வேண்டாம். ஒரு நல்ல கதையை தயாரிப்பாளர்கள் முழுமையாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். இந்த திரைப்படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் எந்த வகையான கதாபாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர். அவர் ஒரு பள்ளி மாணவனாக கூட இயல்பாக நடிக்க முடியும். இந்த படத்தின் ஹீரோயின் மற்றும் இயக்குநருக்கும் என் வாழ்த்துகள். ஜி.வி. பிரகாஷ் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்றாலும், இந்த படத்தில் ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். அவரிடம் எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது. ‘பண்ணையாரும் பத்மினி’ திரைப்பட காலத்திலிருந்தே அவர் எனது நண்பர். எந்த நேரத்திலும் அவரை தொடர்பு கொண்டு பேசலாம். அவரது திறமை மேலும் உயரங்களை அடைய வேண்டும்” என்று கூறினார்.
