நடிகை மாளவிகா மேனன், மலையாள சினிமாவைத் தாண்டி தமிழ் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். தமிழில் ‘இவன் வேற மாதிரி’, ‘விழா’, ‘பிரம்மன்’, ‘வெத்துவேட்டு’, ‘நிஜமா நிழலா’, ‘பேய் மாமா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பாலும், வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார்.
கடைசியாக 2022-ஆம் ஆண்டு இயக்குநர் ஆதிராஜன் இயக்கிய ‘அருவா சண்ட’ திரைப்படத்தில் மாளவிகா மேனன் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் இயக்குநர் ஆதிராஜனுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த முறை அவர் நடிக்கவிருக்கும் படம் ‘சிலந்தி-2’. கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற ‘சிலந்தி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாக உள்ளது.
இதுகுறித்து இயக்குநர் ஆதிராஜன் பேசுகையில், “இது என்னுடைய ஐந்தாவது திரைப்படம். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய ஆறு மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகிறது. முழுக்க முழுக்க மிரட்டலான திரில்லர் கதைக்களத்தில் படம் உருவாகி வருகிறது. நடிகை மாளவிகா மேனன் இதுவரை நடித்திராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் இந்த படத்தில் தோன்றுகிறார்.
மேலும் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். படத்தின் முக்கியமான காட்சிகள் கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. ‘லோகா’, ‘காந்தாரா’ போன்ற படங்களில் இருந்ததைப் போல இந்த படத்திலும் அதிக அளவிலான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக 30 நிமிடங்களுக்கு மேல் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற உள்ளதால், தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
