மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மம்முட்டி, தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்றளவும் இளம் நடிகர்களுக்கு இணையாக பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு தனது மாபெரும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஹீரோ கதாபாத்திரங்களோடு மட்டுமல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு விதமான வேடங்களிலும், தேவையான இடங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் கூட சிறப்பாக நடித்துப் பாராட்டுகளை பெற்றுள்ளார். கதைக்கு பொருத்தமான எந்த வகையான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று நடிப்பது அவரது தனிச்சிறப்பாகும்.
சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்த மம்முட்டி, தற்போது மீண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது அவர் பல புதிய படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருக்கிறார்.
இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம், சினிமாவில் தொடர்ந்து நிறைவான நடிப்பை வழங்கி வருகிறீர்களே, அதன் ரகசியம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மம்முட்டி, சினிமாவில் எனது தேடல் ஒருபோதும் முடிவடைவதில்லை. அதனால் ‘நிறைவு’ என்ற வார்த்தைக்கே இடமில்லை. அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக எப்படி நடிக்கலாம் என்பதே எப்போதும் எனது இலக்காக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
