ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘ஓ பட்டர்பிளை’ திரைப்படத்தை விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் வைசாக் சோமநாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய நிவேதிதா சதீஷ், “நான் திரைத்துறையில் அறிமுகமானது முதல் இதுவரை 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலப்பகுதியில் பத்து திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். கதையை ஆராய்ந்து தேர்வு செய்து நடிப்பதால்தான் குறைவான படங்களில் நடித்துள்ளேன். ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு பிறகு உடல் மற்றும் மனநிலையால் சற்று பின்னடைவை சந்தித்தேன். திரைத்துறையை விட்டு விலகி வேறு துறையில் செல்லலாமா என யோசித்த தருணமும் இருந்தது. ஒரு பெரிய அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அப்போது தான் இந்தப் படத்தின் வாய்ப்பு எனக்கு வந்தது. அந்த நேரத்தில் இருந்த என் மனநிலைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும் ஒருவித பொருத்தம் இருந்தது.
மருத்துவமனையில் இருந்து மீண்டு வர இரண்டு மாதங்கள் ஆகும் என்று நான் கூறியபோது, அதுவரை காத்திருக்கத் தயாராக இருப்பதாக படக்குழு தெரிவித்தது. அவர்கள் அளித்த ஊக்கத்தின் காரணமாக பத்து நாட்களிலேயே மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்தேன். திரைத்துறையில் உருவக் கேலி, நிறக்கேலி போன்ற பல சவால்கள் இருந்தாலும், இந்தப் படக்குழு என்னை மிகவும் கவனமாகவும் மரியாதையுடனும் கையாண்டது. இந்த திரைப்படம் எந்த மற்ற படத்தையும் முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்படவில்லை. மாறாக, இனி வரவிருக்கும் படங்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் உணர்வுகளை பேசும் படமாக இது அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
