தற்போது தெலுங்கில் ராம்சரண் நடித்துள்ள திரைப்படம் ‘பெத்தி’. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராய் ராய் ரா ரா’ என்ற பாடலுக்கு ராம்சரண் ஆடியுள்ள நடனம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக அந்தப் பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பாராட்டுகளை குவித்து வருகின்றன. இந்நிலையில், அவரது தந்தையும் முன்னணி நடிகருமான சிரஞ்சீவி, தனது மகனின் நடனத்தைப் பற்றி உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் சிரஞ்சீவி, “என் மகனின் நடன அசைவுகளை பார்த்து நான் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளேன். ‘பெத்தி’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘ராய் ராய் ரா ரா’ பாடல் திரையில் தீப்பொறி பறக்கச் செய்யும். அதில் அற்புதமான ஆற்றல், உணர்ச்சி மற்றும் சினிமா நுண்ணறிவு அனைத்தும் அழகாக கலந்துள்ளன. ராம்சரண் எந்தச் சிரமமும் இல்லாமல், மிக நேர்த்தியாகவும் மின்னல் வேகத்துடனும் ஆடியிருப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. அவர் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்தும் துல்லியம் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. இப்படத்தை சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் புச்சி பாபு சனா, மாயமான இசையை வழங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சக்திவாய்ந்த நடன அமைப்பை வழங்கிய நடன இயக்குநர் ஜானி ஆகியோருக்கும் என் பாராட்டுக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் சிவராஜ் குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
