சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சேயோன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் சிறப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.
‘சேயோன்’ படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் விளக்கமளித்துள்ளார். தான் இயக்கிய ‘தாய் கிழவி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தினை இயக்கவுள்ளார் சிவகுமார் முருகேசன். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
சிவகுமார் முருகேசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ”நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்ட அனைவருடன் ‘தாய் கிழவி’ படம் பார்த்தேன். சிவகார்த்திகேயன் சாரும், ராதிகா மேடமும் எனக்காகவே முதல் நாளில் என்னோடு படம் பார்த்தார்கள். விருமாண்டி மற்றும் முருகர் என இரண்டு தெய்வங்களையும் வழிப்படுபவர்கள் பற்றிய படம் தான் ‘சேயோன்’. இந்த திரைப்படம் யாருக்கும் எதிராகவோ, ஆதரவாகவோ இருக்காது. அனைத்து தெய்வங்களுக்கும் மரியாதை அளிக்கும் படமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
