‘தாய் கிழவி’ திரைப்படத்திற்கு திரையரங்குகளில் மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை காண விருதுநகரில் ஒரு திரையரங்கிற்கு சென்றிருந்தார் நடிகை ராதிகா, அப்போது பேசிய நடிகை ராதிகா, அவர் பேசியபோது, இந்த படத்தை நீங்கள் முழுமையாக ரசித்து பார்த்தீர்களா? அப்படி பார்த்திருந்தால் அதை கேட்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய காலத்தில் குடும்பத்துடன் அமைதியாக அமர்ந்து சிரித்துக்கொண்டே பார்க்கக்கூடிய, அதே சமயம் ஒரு கருத்தையும் தெளிவாக சொல்லக்கூடிய தரமான திரைப்படங்கள் அரிதாகவே உருவாகின்றன. அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் இந்த படம் வெளியாகியுள்ளது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. அதற்கான முக்கிய காரணம் எங்கள் இயக்குநர் சிவகுமார் முருகேசன்” என்று தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து, இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் திறமையான கலைஞர்கள். இப்படிப்பட்ட வலுவான கதையை தேர்ந்தெடுத்து உருவாக்கத் துணிந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் நேரடியாக திரையரங்கிற்கு வந்து ரசிகர்களைச் சந்திக்கிறேன். கடைசியாக ‘மூன்று முகம்’ திரைப்படத்தின் போது நடிகர் ரஜினிகாந்துடன் மதுரைக்கு வந்தது எனக்கு நினைவில் உள்ளது.
இன்று இங்கு வந்து உங்கள் மகிழ்ச்சியான முகங்களைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இந்த படம் நல்ல படம் என்று உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் சொல்லுங்கள். படம் முடிவில் நான் ஏன் இந்த கதாபாத்திரத்தில் நடித்தேன் என்பது உங்களுக்கு புரியும். ஒரு பெண்ணாக, பல ஆண்டுகளாக சவால்களும் ஆதிக்கமும் நிறைந்த சினிமா துறையில் நான் நிலைத்திருக்கிறேன். அது எளிதான விஷயம் அல்ல. ஆனால் என் திறமையிலும் என்னை நம்பிய மன உறுதியிலும் நான் எனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டேன். அதில் எனக்கு பெருமை உண்டு. நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கூட ‘நீங்கள் உங்கள் தந்தையைப் போலவே பேசுகிறீர்கள்’ என்று கூறியுள்ளனர். அது எனக்கு மிகப் பெரிய பாராட்டாகும்” என்று உரையாற்றினார்.
