‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ திரைப்படங்களை இயக்கிய மீரா கதிரவன் தற்போது ‘ஹபீபி’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவை மகேஷ் முத்துசாமி மேற்கொண்டுள்ளார். இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.
இந்த படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறியதாவது: “இது என் கனவு திரைப்படம். இப்படிப்பட்ட ஒரு படத்தையே என் முதல் படமாக இயக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தான் நான் திரைத்துறைக்கு வந்தேன். ஆனால் அதை நடைமுறைப்படுத்த இருபது ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்த திரைப்படம் வெறும் கதை சொல்லும் படமாக இல்லாமல், நான் வாழ்ந்து பார்த்த, நெருக்கமாக உணர்ந்த உலகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “நன்றி, உண்மை மற்றும் அன்பு ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. தவறான புரிதல்கள் அதிகரித்து வரும் இக்காலத்தில் மனிதநேயம் மற்றும் பாசம் நிறைந்த வாழ்க்கையை அதன் இயல்பில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமே இந்த படத்தின் அடிப்படை. பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ‘வல்லோனே’ பாடலை மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் இ.எம். ஹனிபாவின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உருவாக்கி பாடவைத்து இந்தப் படத்தில் இணைத்துள்ளோம்,” என்று கூறினார்.
