இந்தி திரைப்பட உலகின் முன்னணி பின்னணிப் பாடகராக விளங்குபவர் அர்ஜித் சிங். தற்போது 38 வயதாகும் அவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக திரைப்படங்களில் பாடி வருகிறார். ‘ஆஷிக் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தும் ஹி ஹோ’ பாடல் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய புகழை பெற்றார். தமிழிலும் ‘நான் உன் அழகினிலே’, ‘அடடா என்ன அழகு’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியுள்ளார். கடந்த ஆண்டு இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.
இந்நிலையில் இனி திரைப்படங்களில் பாடப்போவதில்லை என்று அர்ஜித் சிங் சமீபத்தில் அறிவித்தார். அவர் வெளியிட்ட பதிவில், திரையிசைப் பாடல்களில் ஒருவித சலிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், தனது வளர்ச்சிக்காக புதிய வகை இசைகளை ஆராய விரும்புவதாகவும் கூறினார். ஒரே மாதிரியான இசையில் ஆர்வம் குறைந்து விட்டதாகவும் தெரிவித்தார். பின்னணிப் பாடகராக இருந்து விலகினாலும் இசையை முழுமையாக விட்டு விடவில்லை என்றும், இனி தனித்துவமான இசை உருவாக்குவதிலும் இந்திய சாஸ்திரிய இசையில் அதிக கவனம் செலுத்தவும் விருப்பம் இருப்பதாகவும் கூறினார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகர் ஆமீர் கானுக்காக தனது முடிவை அர்ஜித் சிங் மாற்றியுள்ளார். ஆமீர் கான் தயாரிப்பில் உருவாகும் ‘ஏக் தின்’ திரைப்படத்தின் அறிமுகப் பாடலைப் பாடுமாறு அவரை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார். அதற்காக மும்பையிலிருந்து மேற்கு வங்கம் சென்று தனது சொந்த கிராமத்தில் இருந்த அர்ஜித் சிங்கை சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர் பாடுவதற்கு சம்மதித்துள்ளார். இருவரும் சந்தித்துக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
