நடிகர் தனுஷுடன் ஒருநாள் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை நடிகை மிருணாள் தாக்கூர் வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபகாலமாக பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்துவரும் அவர், சில நிகழ்ச்சிகளில் தனுஷை சந்தித்தது ரசிகர்களிடையே பேசுபொருளாக இருந்தது.
இந்த நிலையில் தனது புதிய திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் இதுகுறித்து திறந்த மனதுடன் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தனுஷின் பல படங்களை பார்த்த பிறகு அவருடைய பெரிய ரசிகையாக மாறிவிட்டதாக கூறினார்.
ராயன், மாரி, ராஞ்சனா, கேப்டன் மில்லர், அசுரன் போன்ற திரைப்படங்கள் தனது மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், குறிப்பாக ‘அசுரன்’ திரைப்படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடனக் கலைஞர் மற்றும் இயக்குநராகவும் தனுஷ் பல திறமைகள் கொண்டவர் என அவர் பாராட்டியுள்ளார்.
மேலும் ‘தேரே இஷ்க் மேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதும் தனது ‘சன் ஆப் சர்தார் 2’ திரைப்படத்தின் திரையிடலுக்கு வருமாறு கேட்டபோது அவர் வந்தது தன்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்ததாகவும், எதிர்காலத்தில் அவருடன் ஒரு படத்தில் நடிக்க மிகவும் விருப்பம் இருப்பதாகவும் மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
