நெல்லையில் நடைபெற்று வரும் பொருநை புத்தகத் திருவிழாவில் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, சமூகத்தில் நிலவி வரும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை ஒரே கோணத்தில் மட்டுமே அணுகாமல், பல்வேறு பார்வைகளில் ஆராய்ந்து புரிந்துகொள்ள புத்தக வாசிப்பு மிகவும் அவசியமானது. எனக்குள் ஒருகாலத்தில் இருந்த பயத்தை நீக்கி, என்னுடைய கதைகளை உலகத்திற்கு உரிய மொழியிலும் தன்னம்பிக்கையுடனும் வெளிப்படுத்த தேவையான துணிச்சலையும் ஆற்றலையும் அளித்தது புத்தக வாசிப்பே. நான் இதுவரை இயக்கிய ஐந்து திரைப்படங்களும் வெறும் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டவை அல்ல; அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு சமூகக் கருத்தை எடுத்துரைக்கும் பிரசாரங்களாகவே அமைந்துள்ளன.
இன்றைய தமிழ் சமூக வாழ்வியலில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் அநீதி குறித்து பேசுவதே என் படைப்புகளின் முக்கிய நோக்கம். எது சரி, எது தவறு, எதை நாம் சிந்தித்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை மக்கள் விவாதிக்கத் தூண்டுவதற்காகவே என் திரைப்படங்கள் உருவாகின்றன. என் கலை வடிவத்தின் மூலம் சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாற்றத்தின் அவசியம் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருவேன்.
நான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவன் அல்ல. கலைதான் என் அடித்தளம்; அந்த தளத்தில் நின்றபடியே நான் நம்பிக்கை கொண்ட சமூக நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்ற மதிப்புகளுக்காக உறுதியாக செயல்படுவேன். என் திரைப்படங்களும் அந்தப் போராட்டத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட வேண்டும். வாசிப்பு என்பது இயக்குநர்களுக்கோ, கலைஞர்களுக்கோ மட்டும் தேவையானது அல்ல; மனித சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாத ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.
