இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் கனவுத் திட்டமாக உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சுமார் 50 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ராமாயண அத்தியாயம் தொடர்பான காட்சிகளும் உட்பட பாதி படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன என்றும் அவர் விளக்கியுள்ளார். மீதமுள்ள 50 சதவீத படப்பிடிப்பை வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், முழு படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக,விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் விரிவாக நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, இந்த திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைப் போல ‘நாட்டு நாட்டு’ போன்ற உற்சாகமான பாடல்களைக் கொண்டிருக்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
‘வாரணாசி’ திரைப்படம் முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையுடன் உருவாகி வருவதாகவும் ராஜமவுலி குறிப்பிட்டுள்ளார். மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் சுமார் மூன்று மணி நேரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
