‘ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகை பிரீத்தி முகுந்தன், தற்போது தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். அவர் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் பிரீத்தி முகுந்தனின் சண்டைக் காட்சிகள் பாராட்டுகளை குவித்து வருகின்றன.
தனது திரைப்பயணம் குறித்து பேசிய அவர், ஒவ்வொரு படத்திலும் புதிய மற்றும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். தென்னிந்திய மொழிப் படங்களுடன் இந்தி திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது தனது இலக்கு என்றும் கூறினார். தற்போது நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து வருவதாகவும், ரசிகர்களின் வரவேற்பை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த படங்களை முடிவு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ‘பிளாஸ்ட்’ படத்திற்காக கராத்தே பயிற்சி பெற்றதாக கூறிய அவர், ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக செயல்பட கடுமையாக உழைத்ததாக தெரிவித்தார். குறிப்பாக ‘விக்ரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஏஜென்ட் டினா கதாபாத்திரம் தனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் தனது நடிப்பில் 5 முதல் 6 திரைப்படங்கள் வெளியாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
