கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துவரும் திரைப்படம் ‘டாக்சிக்’. இப்படத்தின் தெலுங்கு மாநிலங்களுக்கான திரையரங்கு உரிமை ரூ.120 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், ஆங்கிலம் அல்லாத வெளிநாட்டு வெளியீட்டு உரிமை ரூ.105 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த எண்ணிக்கைகள் தொடர்பாக சில தரப்பினர் சந்தேகம் எழுப்பி, இவை திட்டமிட்டு பரப்பப்பட்ட ‘பில்ட்அப்’ செய்திகள் எனவும் விமர்சனம் செய்தனர்.
யஷ் நடித்த ‘கேஜிஎப் 2’ திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மொத்தமாக சுமார் ரூ.130 கோடி மட்டுமே வசூலித்த நிலையில், ‘டாக்சிக்’ படத்தின் உரிமை மட்டும் ரூ.120 கோடிக்கு விற்கப்படுவது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கிடையில், விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தான் ‘டாக்சிக்’ படத்தின் தெலுங்கு உரிமையை பெற்றுள்ளார் என்ற தகவலும் வெளியானது.
‘மார்க்கண்டேயா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தில் ராஜுவிடம் இதுகுறித்து செய்தியாளர் ஒருவர் நேரடியாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “தயாரிப்பாளருக்கு அந்த தொகையை நான் பரிமாற்றம் செய்த பிறகு, வங்கிக் கணக்கு விவரத்தை காட்டினால் அனைவரும் நம்புவார்கள்,” என்று தெரிவித்தார்.
