இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்த தெலுங்கு திரைப்படம் ‘ஹனு மான்’ 2024ஆம் ஆண்டு வெளியானது. பான் இந்தியா அளவில் வெளியிடப்பட்ட இந்த படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. திரைப்படத்தின் முடிவில் அதன் அடுத்த பாகமான ‘ஜெய் ஹனுமான்’ பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ‘காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ரிஷப் ஷெட்டி ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஒரு வருடமாகியும் படப்பிடிப்பு தொடங்கப்படாததால் ரசிகர்களிடையே கேள்விகள் எழுந்தன. ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தின் பணிகளில் ரிஷப் ஷெட்டி தீவிரமாக பிஸியாக இருந்ததே இந்த தாமதத்திற்கு காரணம் என கூறப்பட்டது.
தற்போது ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தின் பணிகளை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் பிப்ரவரி 22ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் ஹம்பி நகரில் இப்படத்தின் பூஜை நடைபெற உள்ளது. அதன் பின்னர் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
