தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். அதிரடி கதாப்பாத்திரங்களின் மூலம் தனித்துவமான இடத்தைப் பெற்ற இவர், நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். “சேவகன்”, “ஜெய் ஹிந்த்”, “தாயின் மணிக்கொடி”, “வேதம்”, “ஏழுமலை”, “சொல்லிவிடவா” உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் “சீதா பயணம்” என்ற புதிய திரைப்படத்தை அர்ஜுன் இயக்கியுள்ளார். இதில் நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. வருகிற 14-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், “சீதா பயணம்” பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், தனது தந்தை அர்ஜுனைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதில், படப்பிடிப்பில் அப்பா மிகவும் கண்டிப்பாக இருப்பார். இந்த படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். இது நிச்சயம் வெற்றிப் படமாகும். அப்பா எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைப்பார். ‘முதல்வன்’ படப்பிடிப்பின் போது நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அவருடைய கழுத்து காயமாகி நிலையில் இருந்தது. அதை பார்த்து நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். அந்த படத்தில் வீடு வெடித்து எரியும் காட்சியில் விபத்து ஏற்பட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதை நினைக்கும் போதும் இன்றும் மனது கஷ்டமாக உள்ளது” என்றார்.
