இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘மகாராஜா’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு முக்கியமான படமாக அமைந்தது. நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், சஞ்சனா, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வெளியானபோது விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல பாராட்டுகளை பெற்ற இந்த படம், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து, ‘மஹாராஜா’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற விருப்பத்தை விஜய் சேதுபதி வெளிப்படுத்தினார். அதற்காகவே, இயக்குநர் நிதிலன் சாமிநாதனிடம் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதுமாறு அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது, நிதிலன் ‘மஹாராஜா’ இரண்டாம் பாகத்திற்கான முழுமையான கதையை எழுதி முடித்துள்ளார். விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் பிற திரைப்படங்களின் பணிகளை நிறைவு செய்த பிறகு, ‘மஹாராஜா’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், விஜய் சேதுபதியை தவிர மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தின் இறுதியில், வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப்பின் மகளை, விஜய் சேதுபதி தனது மகள் போல வளர்ப்பதாக கதை முடிந்திருந்தது. இரண்டாம் பாகத்தில், அந்த மகளை கேட்டு அனுராக் காஷ்யப்பின் சகோதரன் வருவது போன்ற கதை அமைப்பும், விஜய் சேதுபதி, அவரது மகள் மற்றும் ஒரு புதிய வில்லன் ஆகிய மூவரை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
