இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில், நடிகர் கவின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ‘டாடா’. 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த படம், வெளியான சமயத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், இன்றுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்த படத்தில் நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். அவருடன் பக்யராஜ், ஐஸ்வர்யா ரவி, புக்ரு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்திருந்தார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருந்தார். உணர்ச்சிப்பூர்வமான கதையமைப்பு, இயல்பான நடிகர்களின் நடிப்பு மற்றும் மனதைத் தொடும் இசை ஆகியவை ‘டாடா’ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. தந்தை – மகன் உறவை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், குடும்ப ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் கணேஷ் கே. பாபு, ‘டாடா’ திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “மூன்று வருடங்களுக்கு முன்பு, ‘டாடா’ என் கைகளை விட்டுவிட்டு உங்கள் இதயங்களில் ஒரு வீட்டைக் கண்டுபிடித்தது. ஒரு இயக்குநராக, நீங்கள் வாழ்ந்த ஒரு கதை, அது புரிந்துகொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் அமைதியாக உலகிற்குள் நடக்கும்போது, அது மிகவும் பலவீனமான தருணமாக இருக்கும்.
நீங்கள் திருப்பிக் கொடுத்தது வெறும் பாராட்டுகள் மட்டுமல்ல; அது மிகவும் அரிதான ஒன்று. ஏற்றுக்கொள்ளுதல், பொறுமை மற்றும் நிலைத்திருந்த அன்பு. நீங்கள் ‘டாடா’வை பார்த்து விட்டு செல்லவில்லை; அதை நீங்கள் பிடித்துக் கொண்டீர்கள். அதைப் பற்றிப் பேசினீர்கள், மீண்டும் மீண்டும் பார்த்தீர்கள், பாதுகாத்தீர்கள், அதை உங்கள் சொந்தமாக்கிக் கொண்டீர்கள். அந்த மாதிரியான தொடர்பை உருவாக்கவோ அல்லது சந்தைப்படுத்தவோ முடியாது; அதை உணர மட்டுமே முடியும். இன்றும் கூட யாராவது எனக்கு ‘டாடா’ பற்றி பேசும்போது, நான் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன் என்பது நினைவிற்கு வருகிறது. இந்தப் படத்தை அதன் வெளியீட்டு நாளுக்கு அப்பாலும் சுவாசிக்க அனுமதித்ததற்கு நன்றி. மூன்று ஆண்டுகளான அன்பு, மௌனம், உரையாடல்கள் மற்றும் நினைவுகளுக்கு” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
