மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். குடும்ப உறவுகள், த்ரில்லர் அம்சங்கள் மற்றும் உணர்ச்சிகளை இணைத்து சொல்லப்பட்ட இந்த கதை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, இதே கதையை அடிப்படையாக கொண்டு தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் மோகன்லால் மற்றும் மீனா இணைந்து நடித்த நிலையில் ஜீத்து ஜோசப் இயக்கினார். இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் மோகன்லால் – மீனா ஜோடியை வைத்தே அவர் இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘திரிஷ்யம்’ படத்தின் நான்காவது பாகமும் உருவாகுமா? என்ற கேள்வி இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மூன்றாம் பாகத்திற்கு பிறகு இந்த கதையை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் தன்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கு மேலும் கதையை இழுத்துச் சென்றால், அதன் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த மூன்றாம் பாகத்தோடு ‘திரிஷ்யம்’ திரைப்பட தொடர் முழுமையாக நிறைவடைகிறது என்று அவர் தெளிவாக தெரிவித்துள்ளார்.
