இந்திய சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களின் வரிசையில் என்றும் தனித்த இடம் பிடித்திருக்கும் திரைப்படம் ‘ஷோலே’. 1975ஆம் ஆண்டு வெளியான இந்த படம், 50 ஆண்டுகள் கடந்த பிறகும் ரசிகர்களிடையே தொடர்ந்து பேசப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, திலீப் குமார், அம்ஜத் கான், ஹேமமாலினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த மறக்க முடியாத படத்தை இயக்கியவர் ரமேஷ் சிப்பி ஆவார்.
சில மாதங்களுக்கு முன்பு, இப்படத்தின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மறைந்தார். இந்த சூழலில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் ‘ஷோலே’ இயக்குநர் ரமேஷ் சிப்பியும், தர்மேந்திராவின் மனைவியும், இப்படத்தின் கதாநாயகியுமான ஹேமமாலினியும் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய ரமேஷ் சிப்பி, தர்மேந்திரா தொடர்பான ஒரு ஆச்சரியமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.
“ஒரு முறை ‘ஷோலே’ படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து நேரடியாக நடந்து கொண்டு படப்பிடிப்பு தளத்திற்குச் செல்ல வேண்டும் என்று தர்மேந்திரா முடிவு செய்தார். அந்த படப்பிடிப்பு தளம் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. இருந்தாலும், அதிகாலை இரண்டு மணிக்கு மேல் எழுந்து நடக்கத் தொடங்கினார். கிளம்புவதற்கு முன், ஒரு இளநீரில் சிறிது ஆல்கஹாலை கலந்து குடித்துவிட்டு நடைபயணம் தொடங்கினார். இவ்வாறு கலந்து குடிப்பது அதிக எர்ஜியை தரும் என்று அவர் நம்பியதாகவும், அதை யாரும் எளிதில் நம்ப மாட்டார்கள் என்றும் ரமேஷ் சிப்பி கூறினார்.
சுமார் ஐந்து மணி நேரம் தொடர்ந்து நடந்து, காலை ஏழு மணியளவில் படப்பிடிப்பு தளத்தை அடைந்தார் தர்மேந்திரா. அங்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுத்துவிட்டு, ‘நான் ரெடி’ என்று சொல்லி படப்பிடிப்புக்கு தயாராக வந்து நின்றார். பொதுவாக தர்மேந்திரா மிகுந்த ஜாலியான நபராக இருந்தாலும், சில விஷயங்களில் அவர் மிகவும் விடாப்பிடியாக இருந்து சாதிப்பார்” என்று ரமேஷ் சிப்பி தெரிவித்துள்ளார்.
