அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கியமான முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘கனா’ முதல் ‘ஹவுஸ் மேட்ஸ்’ வரை இதுவரை எட்டு திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது, பேஸன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். ‘தாய் கிழவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பெரும் கவனம் பெற்ற நிலையில், இப்படம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்திற்காக மலையாளத்தைச் சேர்ந்த ஒப்பனைக் கலைஞர் வினீஷ் அழைத்து வரப்பட்டு, சிறப்பான ஒப்பனை வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘பவுனுத்தாயி’ என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இந்த தோற்றத்தை உருவாக்குவதற்காக, 100 கிழவிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை பார்த்த நடிகர் கமல்ஹாசன், மிகவும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக பாராட்டியதாக நடிகை ராதிகா இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் வாழும் வயதான பெண்களின் நெத்திச் சுறுக்கம், முடியின் நிறம், மச்சம், தழும்பு, பற்களின் நிறம் உள்ளிட்ட அனைத்தும் மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.
